உலகையே ஆளப் புறப்பட்ட அலெக்ஸ்சாண்டர் , வழியில் பரந்து விரிந்து கிடந்த ஒரு ஆற்று மணற்பரப்பைக் கண்டான் ; அங்கே ஒரு துறவி துண்டை விரித்துப் போட்டு அதன் மேல் படுத்துக் கொண்டிருந்தார் ; அவரை நெருங்கிய மன்னன் ,
'' என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?'' என்றான் அதிகாரமாக ;
'' குளிர் காய்ந்து கொண்டிருக்கிறேன் '' என்றார் துறவி இயல்பாக ;
'' ஓ....நான் யார் தெரியுமா ?''என்றான் ஆணவமாக ;
'' தெரிய வில்லையே '' கால் மேல் கால் போட்டவாறே பதிலளித்தார் துறவி ;
'' நான் தான் அலெக்ஸ்சாண்டர் !..''
'' நன்று ...''
'' உங்களுக்கு என்ன வேண்டும் ?....பொன்னா....பொருளா ..மாட மாளிகையா ?...எது வேண்டுமோ கேளுங்கள் ...தருகிறேன் !..''
'' நான் பற்றற்ற துறவி .... எனக்கு இவை எதுவும் வேண்டாம் ....ஆனால் ஒரே ஒரு உதவி மட்டும் .....'' அவரை முடிக்க விடவில்லை மன்னன் ; பரபரப்புடன் ,
'' ம்.....கேளுங்கள் .....காத்திருக்கிறேன் .....''
'' நீ கொஞ்சம் விலகி நில் ........உன் நிழல் என் மேல் படும் வெய்யிலை மறைக்கிறது !..''
துறவியின் அமைதியான பதில் கேட்டு அவமானத்தில் தலை குனிந்தான் ஆணவத்தின் ஒட்டு மொத்த உருவமான அலெக்ஸ்சாண்டர் !!....